Saturday, March 13, 2010

Auto Driver Help to Elderly people

அபூர்வ ஆட்டோக்காரர்

`மீட்டருக்கு மேல் எக்ஸ்ட்ரா ஏதாவது போட்டு வாங்க முடியுமா?` என்று பரபரக்கும் ஆட்டோக்காரர் களுக்கு மத்தியில்... முதியோர், ஊனமுற்றோர், பார்வையற்றோர் உள்ளிட்டோருக்கு இலவசமாகவே ஆட்டோ ஓட்டி சேவை செய்துகொண்டிருக்கிறார் 27 வயது இளைஞரான பஞ்சதுரை!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஏரியாவில் அவரை சந்தித்தோம். வெகுளித்தனமாகவே பேசினார். ``பக்கத்துல இருக்கிற புத்தூருதான் எனக்கு சொந்த ஊரு. சின்ன வயசுலருந்தே நம்மால முடிஞ்சவரைக்கும் அடுத்தவங்களுக்கு உதவியா இருக்கணும்னு நெனப் பேன். அந்த நெனப்புத்தான் இப்ப என்னை இங்க கொண்டாந்து நிறுத்தியிருக்கு. ஆரம்பத்துல முறுக்கு யாவாரம்தான் பாத்தேன். அது கையைக் கடிச்சிருச்சு. அதுக்கப்புறம் என் பொண்டாட்டியோட நகைகளை அடமானம் வெச்சு அப்புடி இப்புடி புரட்டி இந்த `ஷேர் ஆட்டோ`வை வாங்குனேன். `எந்தத் தொழில் செஞ்சாலும் அதால நாலு பேருக்கு நன்மை இருக்க ணும்`னு எங்க அம்மா அடிக்கடி சொல்லும். அந்த சொல்படிதான், இயலாதவங்களுக்கு மட்டும் கடந்த ஏழு வருஷமா இலவச ஆட்டோ சேவையை செஞ்சுக் கிட்டு இருக்கேன். இது ஒண்ணும் பெரிய சாதனை இல்லைங்க... ஏதோ என்னால முடிஞ்சது...`` என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அங்கு வந்த டிராஃபிக் போலீஸ்காரர் ஒருவர்,

``ஏய்... இங்கெல்லாம் நிப்பாட்டக் கூடாது. வண்டிய எட்ரா...`` என்று அனல் வீச்சாக வார்த்தைகளைக் கொட்டிவிட்டுச் சென்றார். வண்டியை இன்னொரு இடத்துக்கு நகர்த்திச் சென்று நிறுத்திய பஞ்சதுரை, ``நான் படிச்சது ஆறாப்புதாங்க. ஆனாலும், என் வாயிலருந்து இதுவரை ஒரு கெட்ட வார்த்தைகூட வந்ததில்லை... படிச்ச போலீஸ்காரர் எம்புட்டு மரி யாதையா(!) பேசிட்டுப் போறாரு பாத்தீங்களா..? என் னைப் பற்றி தெரிஞ்ச பல போலீஸ்காரங்க எந்த இடத் துல பாத்தாலும், `வாப்பா துரை... கூல் டிரிங்க்ஸ் சாப்பு டுறீயா?`ன்னு கேக்குறாங்க. அவங்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு ஆளு. இதுமட்டுமா..? நான் இலவச சேவை செய்றதால ஆட்டோ ஸ்டாண்டுல எனக்கு இடமில்லைன்னுட்டாங்க. அதுவும் நல்லதுதான். சும்மா ஒரே இடத்துல நின்னுக்கிட்டு வெட்டி அரட்டை பேசிக்கிட்டு இருக்கதுக்கு நம்மபாட்டுக்கு சுத்திக்கிட்டே இருந்தோம்னா ஏதோ, முடியாத நாலு பேருக்கு உதவலாம் பாருங்க...`` என்று நிறுத்தினார்.

இவரது ஆட்டோவில் சல்லிக்காசு செலவில்லாமல் தினமும் சவாரி செய்யும் முதியவர்களான கமால் பாட்ஷா, சுப்பிரமணியன், மாயாண்டி ஆகியோர் நம்மிடம், ``நாங்க எல்லாருமே நித்தப் பொழப்புக்காக தினமும் உசிலம்பட்டிக்கு வந்து போறவங்க. ஒதவி ஒத்தாசைன்னா சொந்தப் புள்ளைககூட உதவாதுக. ஆனா இந்தத் தம்பி, எங்களை காலையிலயும் சாயந்த ரமும் கூட்டிட்டுப் போயி கூட்டியாந்து விடுது. `ஒரு அஞ்சு ரூபாயாச்சும் வங்கிக்கப்பா...`ன்னா கேக்க மாட்டேங்குது. மொத்தத்துல, தம்பியோட ஆட்டோ தான் இப்ப எங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் மாதிரி!`` என்றனர்.

``இவர் இப்படி இருந்தால் வீட்டுச் செலவை எப்படி சமாளிக்கிறீர்கள்?`` என்று பஞ்சதுரையின் மனைவியை சந்தித்துக் கேட்டோம். அதற்கு, ``வாட கைக்கு ஆட்டோ ஓட்டுனா ஓனருக்கு வாடகைப் பணம் குடுப்போம்ல... அந்தக் காசு மக்களுக்கு பயன்படுதுன்னு நெனச்சுக்க வேண்டியதுதான்!`` - கணவரைக் கா&22975;்டிலும் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு பேசினார் அவரது மனைவி ஜோதி லட்சுமி! அவரை பெருமையோடு ஏறிட்ட பஞ்சதுரை, ``நாலு பெரியவங்கள இலவசமா ஆட்டோ வுல கூட்டிட்டுப் போயி இறக்கி விடுறப்ப, `நீ மகராசனா இருப்பே...`ன்னு வாழ்த்துறாங்களே... அதுக்கு முன்னாடி பணங்காசெல்லாம் தூசுங்க...`` என்றார். பெயரில்தான் பஞ்சமெல்லாம்... மனசால் கோடீஸ்வரர்!

No comments:

Post a Comment